தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான உலக உடற்திறனாய்வு விளையாட்டுப் போட்டிகள் பிப். 13-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க. பாபு தெரிவித்திருப்பது: 2018 - 19 ஆம் ஆண்டுக்கான உலக உடற்திறனாய்வு திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளி முதல் சிபிஎஸ்இ வரையிலான பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 6 தடகளப் பிரிவுகளில் தேர்வு அந்தந்தபள்ளிகளில் நடத்தப்பட்டன. இதில், 8, 9, 10 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குக் கல்வி மாவட்ட அளவில் உடற் திறனாய்வு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
கல்வி மாவட்ட அளவில் 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்துக்கு பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப். 13-ஆம் தேதியும், கும்பகோணம் கல்வி மாவட்டத்துக்கு கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் பிப். 14-ஆம் தேதியும், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்துக்கு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் பிப். 20-ஆம் தேதியும் காலை 8 மணிக்குநடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் மண்டல அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர்.
மண்டல அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தலா ரூ. 6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.