தஞ்சாவூரில் உரிய ஆவணங்களின்றி வளர்க்கப்பட்ட சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
தஞ்சாவூர் நாகை சாலை சோழன் நகரில் உள்ள ஒரு வீட்டில் 5 வயது சிறுமி வளர்க்கப்படுவதாக சைல்டு லைன் அமைப்புக்கு செவ்வாய்க்கிழமை புகார் வந்தது. இதையடுத்து, தொடர்புடைய வீட்டுக்கு சைல்டு லைன் அமைப்பினர் சென்று அச்சிறுமியை வளர்த்த பெண்ணிடம் விசாரித்தனர்.
அச்சிறுமியை அவரது பெற்றோர் தன்னிடம் ஒப்படைத்து வளர்க்கும்படி கூறியதால், வளர்த்து வருகிறேன் என்றார் அவர். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அப்பெண்ணிடம் இல்லை.
எனவே, அச்சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அச்சிறுமி அரசுக் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.