பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் இணைந்து நடத்திய கிராமப்புற மக்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்த 5 நாள் கருத்தரங்கின் நிறைவு நாள் கருத்தரங்கம் முடச்சிக்காடு கலைஞர் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் (பொ) மற்றும் ஒருங்கிணைப்பாளர் சி. ராணி தலைமை வகித்தார். முதல்நாள் கருத்தரங்கில் அழகுக்கலை நிபுணர் எம்.சந்தியா சுந்தரி கலந்து கொண்டு, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, சந்தைப்படுத்துதல், வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.
2ஆம் நாள் கருத்தரங்கில் தாவர வளர்ப்பு குறித்து பேராவூரணி தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் எஸ். பரிமேலழகர், சேதுபாவாசத்திரம் தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் எஸ்.ராஜா, பி.முத்துவேலு ஆகியோர் பேசினர். கழனிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மூன்றாம் நாள் கருத்தரங்கில், இயற்கை விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பேராவூரணி தோட்டக் கலைத்துறை அலுவலர் எஸ்.கார்த்திகேயன், ''மலர்ச்செடிகள் வளர்ப்பு மற்றும் மண்ணின் தன்மை குறித்தும், இயற்கை விவசாய ஆர்வலர் சசிகுமார்,'' இயற்கை உணவுகள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு'' குறித்து பேசினர்.
4ஆம் நாள் கருத்தரங்கம் குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் என்.சேகர் கலந்து கொண்டு, ''சூரிய ஆற்றல், பயன்பாடு, செயல்பாடு'' குறித்தும், பள்ளி தலைமையாசிரியர் வி.மனோகரன் சூரிய சக்தியின் எதிர்கால தேவை குறித்தும் பேசினர்.
5ஆம் நாள் கருத்தரங்கில், நாகப்பட்டினம் இந்திய வேளாண்மை ஆய்வுக்கழக மருத்துவர் எஸ்.முத்துக்குமார் கலந்து கொண்டு, ""கால்நடைகள் பராமரிப்பு, கால்நடைகளை தாக்கும் நோய்கள்'' குறித்து பேசினார்.
கருத்தரங்கில் பேராசிரியர்கள் ஆர். ராஜ்மோகன், என். பழனிவேலு, ஜெ. உமா, எஸ். ஜமுனா, ஜி. மோகனசுந்தரம், ஆர். அடைக்கலம், ஏ. ராஜேஷ் மற்றும் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி அலுவலகப் பணியாளர்கள், முடச்சிக்காடு கிராமத்தினர், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.