ஒரத்தநாடு அருகே மேலவன்னிப்பட்டு கிராமத்திலுள்ள கோயிலில் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.
ஒரத்தநாடு வட்டம், மேலவன்னிப்பட்டில் அருள்மிகு குன்னமய்யார் கோயில் உள்ளது. இக்கோயிலில் விலையுயர்ந்த பொருள்கள், உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோயில் பூட்டப்பட்டு பிறகு யாரேனும் உள்ளே நுழைந்தால், கோயில் நிர்வாகிகளின் செல்லிடப்பேசிக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி செல்லும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுவர் ஏறி திருடுவதற்காக கோயிலுக்குள் நுழைந்தனர்.
இதையடுத்து கோயில் நிர்வாகிகளின் செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி சென்றது.
இதைத் தொடர்ந்துகோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் குன்னமய்யார் கோயிலுக்கு விரைந்து வந்தனர்.
இதையறிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், கோயிலுக்குள் இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தநாடு போலீஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
திருட்டு முயற்சியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களின் ரேகைகளை தடயவியல் நிபுணர்கள் பதிவு செய்தனர். கோயில் பூசாரி நாகேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.