கஜாபுயலால் குடிசைகள், ஓட்டு வீடுகள், தென்னை மரங்களை இழந்து இதுவரை நிவாரணம் பெறாமல் விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், கொன்றைக்காடு ஆசாரித் தெருவில் ஓராண்டாக பழுதடைந்துள்ள ஆழ்குழாய் கிணறு, மோட்டாரை பழுதுநீக்கி குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000 உதவித்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.இந்துமதி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ஏ.வி.குமாரசாமி முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு, மாவட்டச்செயலர் கோ.நீலமேகம் சிறப்புரையாற்றினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பூவாளூர் மாணிக்கம், ரெங்கசாமி, ராமலிங்கம், பாஸ்கர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.