தஞ்சாவூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான புவியியல் வரைபடத்திறன் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் நடைபெற்ற இப்பயிற்சியில் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் 62 ஆசிரியர்களுக்கு புவியியல் வரைபடத்திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், வரைபடங்களும் அளவைகளும், அட்ச தீர்க்க ரேகைகள், திசைகள், வரைபடக் குறியீடுகள், கான்டூர், வானிலையும் குறியீடுகளும், நில வரைபட விளக்கங்கள் மற்றும் ஜிபிஎஸ் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. சமூக அறிவியல் ஆசிரியர் மணிகண்டன், ஆசிரியை உமா மகேஸ்வரி கருத்தாளர்களாகச் செயல்பட்டு பயிற்சி வழங்கினர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி, சுரேஷ், குமார் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.