ஜைன மதத்தின் அனு விரத இயக்கத் தலைவர் மஹாஸ்மரண் ஆச்சார்யர் கும்பகோணத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார்.
ஜைன மதத்தின் அனுவிரத இயக்க தலைவரும், 11ஆவது ஆச்சார்யருமான மஹாஸ்மரண் அகிம்சை கொள்கையை பிரசாரம் செய்யும் வகையில், தமிழகத்தில் நவ. 24ஆம் தேதி முதல் ஆன்மிக பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். 50 ஆண்டுகளுக்கு பிறகு மஹாஸ்மரண் ஆச்சார்யர் தமிழகத்துக்கு வந்துள்ளார். இவருடன் 80 சிஷ்யர்கள் உள்பட ஏராளமானோர் வந்தனர்.
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அவருக்கு பக்தர்கள் சார்பில் நகர எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சரஸ்வதி பாடசாலையில் பக்தர்களிடம் ஆச்சார்யர் மஹாஸ்மரண் பேசியது:
இந்த உலகமானது, மன இறுக்கம், அமைதியின்மை, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதியுடனும், ஒழுக்கத்துடனும் வாழ்வதற்கேற்ற ஒரு சாத்வீகமான முறைதான் அனு விரதம். மேலும், ஆழ்காட்சி தியானம், வாழ்க்கை அறிவியல் போன்ற அகிம்சை முறையைப் பயிற்சி பெற வேண்டும். இதன் மூலம் நல்லதொரு வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்றார் அவர். மேலும், எந்த உயிரையும் கொல்ல மாட்டேன். மற்றவர்களுக்கு மனதாலும் தீங்கு செய்ய நினைக் கமாட்டேன். வன்முறையால் தாக்க மாட்டேன். உலக அமைதிக்காகவும், அணு ஆயுதமற்ற உலகுக்காகவும் பாடுபடுவேன். யாரையும் தீண்ட தகாதவராக கருதமாட்டேன். வகுப்புவாத வெறியைப் பரப்பமாட்டேன் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர்.
பக்தர்கள் கூட்டு பஜனை பாடல்களை பாடினர். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம. ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆச்சார்யர் தஞ்சாவூர், திருச்சி வழியாக 19ஆம் தேதி ஒசூருக்கு செல்கிறார்.