பாபநாசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க கெளரவ தலைவர் நெடார். எஸ். தர்மராஜன் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்ட செயலாளர் சுவாமிமலை சு.விமல்நாதன் கலந்து கொண்டார்.
கடந்த 2015-16ஆம் ஆண்டு கரும்பு அரைவைப் பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை பல கோடி ரூபாயை திருமண்டங்குடியிலுள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், ஆலை நிர்வாகம் வங்கி அதிகாரிகளின் துணையுடன் பல படிவங்களில் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று, விவசாயிகள் பெயரில் ரூ. 300 கோடிக்கு மேல் கரும்பு அறுவடை போக்குவரத்து கடன் திட்டம் கடன் பெற்று, விவசாயிகளை நிரந்தர கடனாளியாக்கியுள்ளதாக கூறி, இதை கண்டித்தும், ஆலை நிர்வாகத்தின் வங்கி கணக்குகள் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை முடக்க வேண்டும், ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் கையில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.