தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் ஞாயிற்றுக்கிழமை மார்கழி இசை விழா நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கலை பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் இரா. குணசேகரன் தெரிவித்திருப்பது: கலை பண்பாட்டுத் துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையம், சார்பில் பாபநாசம் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் அருகில் மார்கழி இசை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருக்கருகாவூர் சகோதரர்கள் தி.தெ.சி. கெளரிசங்கர், தி.தெ.சி. பாலசங்கர் குழுவினரின் மங்கல இசை நிகழ்ச்சிகளும், 6 மணிக்கு கலை இளமணி ச. கிருத்திகா குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு குடந்தை ரவி குழுவினரின் இசைச்சங்கமம் நிகழ்ச்சியும், 8 மணிக்கு எடஅன்னவாசல் அமிர்தவர்சினி குழுவினரின் மங்கல லயநாதம் நிகழ்ச்சியும், 9 மணிக்கு நாட்டிய மயூரி தீபக் வெங்கடேஷ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
மார்கழி இசை விழாவுக்குப் பொதுமக்களும், இசை ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.