தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி கேத்தலினா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவைக் காவடிக் கலைஞர் நா. சிவாஜி தொடங்கி வைத்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணியாற்றிய ஆங்கிலத் துறை, சமூகப் பணித் துறை, மருத்துவ நிர்வாகவியல் துறைப் பேராசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் சான்றிதழ்களை தஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்கத் தலைவர் ஜெயபால் வழங்கினார். கல்லூரியின் பணியைச் சிறப்பிக்கும் வகையில் தஞ்சை ஐயா உணவக நிறுவனர் ஸ்டாலின் பீட்டர் பாபு கேடயம் வழங்கினார்.
விழாவில் பாரம்பரிய முறையில் பொங்கலிடப்பட்டது. மேலும், ஏர் கலப்பை, மாட்டு வண்டி, பசு, கன்று, போன்றவற்றையும் அமைத்து உயிரோட்டமுள்ள கிராமத்தை மாணவிகள் உருவாக்கினர். பரதம், வில்லுப்பாட்டு, தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் பான் செக்கர்ஸ் கல்விக் குழும இல்லத் தலைமை சகோதரி பூரண அல்போன்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.