பேராவூரணியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தி பார்சல் கட்டப்பட்ட உணவுப் பொருள்களை பேரூராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை கைப்பற்றி அழித்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய, விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, தலைமை எழுத்தர் சிவலிங்கம் தலைமையில், இளநிலை உதவியாளர் ஜோதி மணி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரமணி, சிவசுப்பிரமணியன், குடிநீர் திட்ட மேற்பார்வையாளர் சார்லஸ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர், பேராவூரணி கடைவீதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட உணவகங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மொத்த விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தினர்.
இதில், 17 உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவுப் பொருட்களை கட்டி விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும், கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்காக இருப்பு வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
தடைசெய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ. 17,500 அபராதமாக விதிக்கப்பட்டது.
உணவகங்களில் தடைசெய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி பார்சல் கட்டுவதும், தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்வதும் குற்றத்திற்குரிய செயல் என எச்சரிக்கப்பட்டது.