பாபநாசம் அருகே வயல் பிரச்னை காரணமாக விவசாய சங்க பிரதிநிதியை தாக்கியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பாபநாசம் அருகே மாலாபுரம் கிராமம், கீழத் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (46). தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர். மாலாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (46). பாஜகவின் ஒன்றிய செயலாளர். இவர்கள் இருவருக்குமிடையே வயல் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கண்ணன் வெள்ளிக்கிழமை பெருமாங்குடியில் உள்ள தனது வயலுக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தி கண்ணனை வழிமறித்து அவரது தலையில் இரும்புக் கம்பியால் தாக்கினாராம். காயமடைந்த கண்ணன் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கண்ணன் அளித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இதேபோல், கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின்பேரில் கண்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தன்னை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாபநாசத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் பிரதான சாலையில் அமர்ந்து கண்ணன் மறியலில் ஈடுபட்டாராம். அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக கண்ணன் மீது போலீஸார் மேலும் ஒரு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.