பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் 6 மாதத்துக்கு வரி வசூலை தள்ளி வைக்க வேண்டுமென பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இக்கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் செம்பை கா.கோவிந்தராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியருப்பது: கஜா புயலால் தங்களின் வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ள நிலையில், வீடுகளையும் இழந்து விவசாயிகள் தவிக்கின்றனர்.
இதுபோல, பட்டுக்கோட்டை நகரில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் சேதமடைந்த வீடுகள், உடைமைகளை இன்று வரை சரி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பின்றி வரி பாக்கி உள்ளோர் வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டித்து வருவது வருந்தத்தக்கது. மேலும், தற்போது நகராட்சி நிர்வாகம் விநியோகிக்கும் குடிநீர் காலை ஒரு வேளை மட்டும் குறைந்த நேரமே வரும் நிலையில், அதையும் துண்டிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
நகரில் புயலால் சேதமடைந்த சாலைகள் செப்பனிடப்படாமலும், குப்பைகள் அகற்றப்படாலும் குவிந்து கிடக்கின்றன. பேருந்து நிலையப் பகுதிகளில் சாக்கடைகள் தூர்வாரப்படாமல், கழிவுநீர் தேங்கி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கெடுபிடி வரி வசூலில் ஈடுபடுவதை நகராட்சி நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.
மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை, குறைந்த பட்சம் 6 மாத காலத்திற்கு வரி வசூல் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.