தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரும் பலத்த காயம் அடைந்தார்.
கும்பகோணம் அருகிலுள்ள ஏராகரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி இளையராஜா (30). இவரது மனைவி பிரியா (24). இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளையராஜா, மனைவி பிரியா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
உறவினர்களால் பிரச்னை உருவாகும் என நினைத்த இளையராஜா, மனைவியைக் காப்பாற்றுவது போல சப்தமிட்டுள்ளார்.
அப்போது எரிந்து கொண்டிருந்த பிரியா, தனது கணவரை கட்டிப்பிடித்துள்ளார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் பிரியா அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.