சவூதி அரேபியத்தில் பணியாற்றிய போது மாரடைப்பால் இறந்த பட்டுக்கோட்டைத் தொழிலாளியின் சடலம், தமுமுகவினர் உதவியோடு திருச்சி கொண்டு வரப்பட்டு, புதன்கிழமை காலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த முதல்சேரி கிராமத்தை சேர்ந்த செபாஸ்டியன் மகன் ஆரோக்கியசாமி (41) . சவூதி அரேபியாவில் தனியார் கிளீனிங் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஊழியராகப் பணியாற்றி வந்த இவருக்கு மனைவி அனிதா, 2மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த டிச.22 ஆம் தேதி பணியிலிருந்த ஆரோக்கியசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். இதையடுத்து தனது கணவரின் சடலத்தை கொண்டு வருவதற்கு உதவிடுமாறு ஆரோக்கியசாமியின் மனைவி அனிதா மற்றும் அவரதுஉறவினர்கள் தமுமுக அமைப்பின் உதவியை நாடினர்.
இதன்பேரில், , தமுமுக நிர்வாகிகள் மீமிசல் நூர் முகமது, திருப்பூண்டி அப்துல் ஹமீது ஆகியோர் இந்திய தூதரகம் மற்றும் சவூதி அரசின் சட்டத்துறை, மருத்துவத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
இந்த முயற்சி காரணமாக, ஆரோக்கிய
சாமியின் சடலம் விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்கிழமை (ஜன.15) இரவு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, தமுமுக திருச்சி மாவட்டத் தலைவர் ரபீக், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா உள்ளிட்ட நிர்வாகிகள் ஆரோக்கியசாமியின் சடலத்தை அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வந்து முதல்சேரி கிராமத்தில் உள்ள ஆரோக்கியசாமி மனைவி அனிதாவிடம் புதன்கிழமை (ஜன. 16) காலை ஒப்படைத்தனர். அதன்பிறகு மதச்சம்பிரதாயப்படி இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு ஆரோக்கியசாமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.