பாபநாசம் அருகே பெண்ணை தாக்கியதாக டாஸ்மாக் விற்பனையாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பாபநாசம் காவல் சரகம், திருக்கருகாவூர் வடக்கு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (31). கார் ஓட்டுநர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் வாசுதேவன்(42). இவர் தஞ்சாவூரிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். வேணுகோபால் மனைவி ஹேமலதா(28) தனது வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை காலை கோலம் போட்டுக் கொண்டிருந்தாராம். வாசுதேவனின் மனைவி வசந்தாவும் (35) அவர் வீட்டுவாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாராம்.
அப்போது, வசந்தா ஹேமலதாவை திட்டினாராம். அங்கிருந்த வாசுதேவன் ஹேமலதாவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேணுகோபால் அளித்த புகாரின்பேரில், பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து ஹேமலதாவை தாக்கியதாக வாசுதேவனை கைது செய்தனர்.