பாபநாசம் அருகேயுள்ள மெலட்டூர் காவல் சரகம், நெய்தலூரை சேர்ந்தவர் கோவிந்தராஜன்(50). அந்தப் பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சகுந்தலா (45). இவர்கள் இருவரும் சனிக்கிழமை நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு கோவிந்தராஜ், சகுந்தலா இருவரும் சென்று கதவை திறந்து பார்த்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த நான்கு மர்ம நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி சகுந்தலா அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் மெலட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தனிப்படையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் ரமேஷ் (23) என்பதும், சகுந்தலாவின் நகை அவர் பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, ரமேஷை கைது செய்த போலீஸார் இதில் தொடர்புடைய மற்ற மூன்று பேரை தேடி வருகின்றனர்.