கூட்டுறவு சங்கத் தேர்தல்: அதிமுக - அமமுகவினர் இடையே தகராறு
கும்பகோணம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுக -அமமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகிலுள்ள உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநருக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக, அமமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவின்போது, உடையாளூர் அண்ணாநகரைச் சேர்ந்த மூதாட்டி பூபதி (70) வரிசையில் நின்றார். அப்போது, இவரது வாக்குச்சீட்டை சிலர் பறித்து, வாக்களித்தனர். இதுகுறித்து அமமுக நிர்வாகிகளிடம் பூபதி முறையிட்டார்.
இதைத்தொடர்ந்து, கள்ள வாக்குகள் பதிவு செய்ததாக அதிமுகவினரும், அமமுகவினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இரு தரப்பினரையும் போலீஸார் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் கற்களை வீசினர். இதனால் போலீஸார் கூட்டத்தினரை கலைத்தனர். இதையடுத்து, தேர்தலை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தேர்தல் அலுவலர் தமிழ்ச்செல்வி தெரிவித்து, அதற்கான அறிவிப்பாணையை சங்க வாயிலில் ஒட்டினார்.