பேராவூரணி அருகே முகம் எரிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் கிடந்த சடலத்தை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர்.
பேராவூரணியிலிருந்து நரியங்காடு வழியாக திருச்சிற்றம்பலம் செல்லும் சாலையில் ஏழுமுக காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் செல்லும் சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதை அவ்வழியாக ஆத்தாளூர் கோயில் திருவிழாவுக்குச் சென்றவர்கள் பார்த்து, திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்துக்குத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஆனந்தி வேதவள்ளி மற்றும் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சடலத்தை மீட்டனர்.
இறந்தவர் ஊதா நிற டவுசர், வெள்ளை நிறப் பனியன் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த வெள்ளை நிற டி- சர்ட் மற்றும் கருப்பு சிவப்பு நிறத்தில் கோடு போட்ட போர்வை மற்றும் சிறு குழந்தையின் பேண்ட், பட்டுக்கோட்டை ஜவுளிக்கடையின் முகவரி உள்ள ஒரு கம்பு பிடி போட்ட துணிப்பை ஆகியன பக்கத்தில் உள்ள கரும்பு காட்டில் ரத்தக்கரையுடன் கிடந்ததை போலீசார் கண்டெடுத்தனர். இறந்த நபரின் முகம் முழுவதுமாகக் கருகி விட்டதால், அவரை அடையாளம் காண முடியவில்லை. தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தஞ்சை தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் ராமச்சந்திரன் கைரேகைகளை பதிவு செய்தார். மோப்ப நாய் ராஜராஜன் சம்பவ இடத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் அண்ணா நகர் வரை சுமார் 3 கி.மீட்டர் தொலைவு வரை ஓடிச் சென்று நின்று விட்டது.
இதுகுறித்து திருச்சிற்றம்பலம் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.