தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,223 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
உரிமையியல், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் , குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் உள்ளிட்டவற்றின் விசாரணை முதன்மை மாவட்ட நீதிபதி வி. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதில் 4 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டன. முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கருணாநிதி, இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பி. ராஜவேல், மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். எழிலரசி, முதன்மை சார்பு நீதிபதி ஸ்ரீவத்சன் உள்ளிட்டோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
இதன் மூலம், நிலுவையில் இருந்த வழக்குகளில் 1,223 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. இவற்றில் 164 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ. 3.96 கோடி இழப்பீடு வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தத்தில் ரூ. 8.28 கோடி அளவில் தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்துக்கான பணிகளை மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான பி. சுதா ஒருங்கிணைத்து மேற்கொண்டார்.