பேராவூரணியில் சனிக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமின் போது ரத்ததானம் செய்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்பட்ட 5 ஆவது ரத்ததான முகாமை பேராவூரணி நகர வர்த்தகக் கழகத் தலைவர் ஆர் .பி.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.
வர்த்தக கழகப் பொருளாளர் எஸ். ஜகுபர்அலி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச்செயலர் வல்லம் பாட்ஷா, மாவட்டப் பொருளாளர் அஷ்ரப் அலி, மாவட்ட துணைச்செயலர் ஆவணம் ரியாஸ், மருத்துவ அணிச் செயலர் ஹாஜா ஜியாவுதீன் ஆகியோர் முகாமில் பங்கேற்று பேசினர். 46 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரத்த தானம் செய்தவர்களுக்கும், முகாமில் பங்கேற்றவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முகாமில் கிளைத் தலைவர் பஷீர் அலி, செயலர் பர்வேஷ், பொருளாளர் இலியாஸ், மருத்துவ அணிச் செயலர் ஷபியுல்லா, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கிப் பிரிவு மருத்துவ அலுவலர் டாக்டர் விஷ்ணு, ஆலோசகர் கண்ணன், மற்றும் மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர்.