கர்ப்பிணிகளுக்கு சத்துப்பொருள்கள் அளிப்பு
By DIN | Published On : 19th July 2019 04:58 AM | Last Updated : 19th July 2019 04:58 AM | அ+அ அ- |

பேராவூரணி வட்டம், வலசக்காட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு வீடு தேடிச் சென்று சத்துப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுத்து, ஆரோக்கியமான தாய், அதிக எடை உள்ள, அறிவு வளர்ச்சி நிறைந்த குழந்தை பிறப்பிற்காக நன்கொடையாளர்கள் மூலம் பசும்பால், நாட்டு வெல்லம், முட்டை, மற்றும் காய்கறி உள்ளிட்ட சத்துப்பொருள்களை வீடு தேடிச் சென்று வழங்கும் நிகழ்ச்சி பேராவூரணி வட்டம், குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி. சௌந்தரராஜன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட தென்னை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க பொருளாளர் செல்வம், 6 ஏழை கர்ப்பிணி தாய்மார்களை தத்து எடுத்து, அவர்களுக்கு சத்துப்பொருள்களை வழங்கினார்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவ காலம் வரை, இந்தத் திட்ட பொருள்கள் கிராம சுகாதார செவிலியர் மூலம் வீடு தேடிச் சென்று வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணி தாய்மார்களின் எடை மற்றும் ஹீமோகுளோபின் அளவு கண்காணிக்கப்படுவதோடு, தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலர் அறிவானந்தம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, பகுதி சுகாதார செவிலியர் தேவி, கிராம சுகாதார செவிலியர்கள் நூர்ஜஹான், தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இன்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.