தஞ்சாவூர் அருகே ஆடு மேய்ப்பதிலும், வீட்டு வேலையிலும் கொத்தடிமையாக இருந்த சிறுவன் அண்மையில் மீட்கப்பட்டார்.
தஞ்சாவூர் அருகே ஏழுப்பட்டியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள். இவர்களில் கடைசி மகன் சந்திரபோஸ் (15). பெற்றோர் இறந்து விட்ட நிலையில், மூத்த சகோதரர் சரவணன், மற்றொரு சகோதரர்களை வளர்ந்து வந்தார். இந்நிலையில் பெற்றோர் அதே பகுதியைச் சேர்ந்தவரிடம் ரூ. 80,000 கடன் வாங்கியிருந்தனர். பெற்றோர் இறந்த பிறகு சரவணனிடம் கடன் கொடுத்தவர் கடனைத் திருப்பித் தருமாறு கேட்டு வந்தார். எனவே, சரவணன், தனது தம்பி சந்திரபோஸை கடன் கொடுத்தவரிடம் வேலைக்கு அனுப்பினார். அங்கு சந்திரபோஸ் 5 ஆண்டுகளாக ஆடு மேய்ப்பது, வீட்டு வேலை செய்வது எனக் கொத்தடிமையாக நடத்தப்பட்டார்.
இதுகுறித்து வந்த புகாரின்பேரில் சைல்டு லைன்லைன் இயக்குநர் பெ. பாத்திமாராஜ், வல்லம் போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சந்திரபோசை மீட்டு குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைத்தார். இவருக்குக் கோட்டாட்சியர் சி. சுரேஷ் விடுதலைச் சான்றிதழை திங்கள்கிழமை வழங்கினார்.