கும்பகோணம் அருகே மாமன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாகப் பேசியதாகத் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனர் உமர்பாரூக் நினைவு நாள் பொதுக் கூட்டம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் ராஜராஜசோழனைப் பற்றி அவதூறாகப் பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளதுடன், சாதிகளுக்கு இடையே பிரிவினை மற்றும் பிளவை ஏற்படுத்தும் விதத்திலும், இளைஞர்கள் மனதில் தீய எண்ணத்தை விதைக்கும் வகையிலும் உள்ளது.
எனவே, ரஞ்சித்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் பாலா திங்கள்கிழமை புகார் அளித்தார்.
இதையடுத்து ரஞ்சித் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கில் பேசியது), உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.