பேராவூரணி அருகே ஆதனூர் கருப்பமனை கிராமத்தில் ஸ்ரீ வீமநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு, 4 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவீமநாயகி அம்மன் திருவிழா ஜூன் 3ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 8ஆம் நாள் திருவிழா ஆதனூர் கருப்பமனைகிராமத்தினர் மண்டகபடியையொட்டி குதிரை எடுப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி நீலகண்டபுரத்திலிருந்து குதிரைகள் தூக்கி பேராவூரணி, பழைய பேராவூரணி, கூப்புளிக்காடு வழியாக ஆதனூர் பேயடிகொட்டல் திடல் வந்தடைந்து, சாமியாடி அருள்வாக்கு சொல்லப்பட்டது.
இந்நிகழ்வில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மீண்டும் குதிரைகள் தூக்கப்பட்டு, அந்த மண்குதிரை மேலே பூசாரி அமர்ந்து ஊர்வலமாக ஸ்ரீ வீமநாயகி அம்மன் கோயில் வந்தடைந்தது. இதில் பக்தர்கள் நேர்த்திகடனாக வேண்டிக் கொண்ட குதிரைகள் , கால்நடைகள், மனிதபொம்மைகள் என 1000க்கும் மேற்பட்ட வேண்டுதல் செய்யப்பட்ட குதிரைகளை பக்தர்கள் சுமந்து வந்து கோயில் வளாகத்தில் வைத்தனர்.
பின்னர் வெட்டும் குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. அதன் பின்னர் கப்பரை சட்டி (தீ சட்டி) ஏந்தி வீதிகளின் வழியாக வந்து கோயிலை அடைந்தது. தொடர்ந்து பூச்சொரிதல், கிடா வெட்டுதல், தூண்டிலில் கோழி கோர்வை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஆதனூர் கருப்பமனை கிராமத்தினர் செய்திருந்தனர்.