பேராவூரணி தமிழ்ப் பல்கலைக்கழக கல்வி மையம் பெரியார்-அம்பேத்கர் நூலகத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க முதலாவது வட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநாட்டிற்கு வட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் இரா.அண்ணாதுரை தொடக்கவுரையாற்றினார்.
செயற்குழு உறுப்பினர்களாக அண்ணாதுரை, பத்மாவதி, பிச்சை, தங்கவேலு, வீராசாமி, ரெத்தினம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்டச் செயலாளர் ஆர். ராஜகோபால் பேசினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காரைக்குடி-திருவாரூர் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும். சென்னை மற்றும் ராமேசுவரத்திற்கு ரயில் இயக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு தாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். பேராவூரணி வட்டாரத்தில் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு பாரதி புத்தகாலய பிரசுரங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. வட்ட இணைச் செயலாளர் க. மாணிக்கம் வரவேற்றார். துணை செயலாளர் சி. நாகரெத்னம் நன்றி கூறினார்.