தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த 50 பாலங்களைப் புனரமைப்பதற்காக ரூ. 36 கோடியை செலவிட நபார்டு வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் கே. பாலமுருகன் தெரிவித்திருப்பது: வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கஜா புயலால் சேதமடைந்த 147 சாலைகள், 115 பாலங்களைப் புனரமைக்க ரூ. 159 கோடி அனுமதித்துள்ளது. இத்திட்டங்களை 2021, மார்ச் 31-ம் தேதி நிறைவு செய்து, இந்த 4 மாவட்டங்களில் 247 சந்தைப்படுத்துதல் மையங்களுக்கு 701 கிராமங்களின் இணைப்பு மேம்படுத்தப்படவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,153 மீட்டர் அளவில் 50 பாலங்கள் ரூ. 36.02 கோடி மறு நிர்மாணிக்கப்படவுள்ளது.
கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறப் பகுதிகளில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகளால் ஆர்.ஐ.டி.எப். நிதி பயன்படுத்தப்படுகிறது. நாட்டில் ஆர்.ஐ.டி.எப். உதவி பெறும் முன்னணி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாடு முந்தைய ஆண்டுகளில் பல கிராமப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.