கும்பகோணம் அருகே புதன்கிழமை ஜனசதாப்தி விரைவு ரயிலில் ஏற்பட இருந்த தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தடுக்கப்பட்டது.
மயிலாடுதுறையிலிருந்து கோவை நோக்கிச் செல்லும் ஜனசதாப்தி விரைவு ரயில் வழக்கம்போல புதன்கிழமை மாலை புறப்பட்டது. கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ரயில் ஆடுதுறை ரயில் நிலையத்தைக் கடந்தபோது ஒரு பெட்டியிலிருந்து புகை வந்தது. இதனால், உடனடியாக சிவப்பு சிக்னல் போடப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர், ரயில் பெட்டிகளில் ரயில் கார்டு ஜேம்ஸ் அமல்நாதன், ஆடுதுறை ரயில் நிலைய அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தபோது, டி5 பெட்டியின் கீழ் பகுதியில் உள்ள பிரேக்குகள் இறுகி கருகி இருந்ததும், அதிலிருந்து புகை வந்திருப்பதும் தெரிய வந்தது.
உடனடியாக அந்தப் பெட்டிக்குரிய அனைத்து பிரேக்குகளும் வண்டியின் இணைப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதை பார்க்காமல் இருந்திருந்தால் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிறுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து 20 நிமிட கால தாமதமாக ரயில் ஆடுதுறையிலிருந்து புறப்பட்டது.