பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் பிப். 24-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவியை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து இத்திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும், அதாவது சிறு, குறு, நடுத்தர, பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்கு அளிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம். மேலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர், தொடர்புடைய பகுதியின் வட்டாட்சியரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து ஜூன் 30-ம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் இந்த பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
இதற்கென தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தி மற்றும் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.