தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பின்னர் தெரிவித்தது:
தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் 2017, டிச. 31 முதல் திறந்த வெளிக் கழிப்பிடமற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திறந்த வெளி கழிப்பிடமற்ற நிலையை நிலைத்த நீடித்த தன்மையுடன் பேணுவதற்குப் பல்வேறு கட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாகப் பேணுதல் மற்றும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது என்றார் ஆட்சியர்.
பயிலரங்கில் கஜா புயல் மறுசீரமைப்பு அலுவலர் ராஜகோபால் சுன்காரா, மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பி. மந்திராசலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.