கும்பகோணம்: கும்பகோணம் அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் நகராட்சி 2-வது வார்டுக்குள்பட்ட கொட்டையூர் தோப்புத்தெருவில் பல நாட்களாகக் குடிநீர் வருவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஏறத்தாழ 3 கி.மீ. தொலைவுக்குச் சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த துணை வட்டாட்சியர் செல்வம் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம் - திருவையாறு சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.