தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2019 - 20 ஆம் ஆண்டில் வட்டியில்லா பயிர்க் கடன் வழங்க ரூ. 311 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது உழவுப் பணிகளைச் செம்மையுறச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாக 243 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்க் கடன் தமிழக அரசால் 2018 - 19 ஆம் ஆண்டில் ரூ. 252 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ. 254 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
2019 - 20 ஆம் ஆண்டுக்கு ரூ. 311 கோடிக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகப் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தொடர்புடைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயன் பெறலாம்.