தஞ்சாவூர் மாநகரில் அனுமதியின்றி வீடுகளுக்கு பொருத்தப்பட்டு குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 6 மின் மோட்டார்களை மாநகராட்சி பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் 51 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி வீடுகளில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால், மற்ற வீடுகளில் உள்ளவர்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை என்ற புகார் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்றது.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன் உத்தரவின்பேரில், தஞ்சாவூர் தெற்கு வீதி, மகர்நோன்புசாவடி பகுதிகளில் உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், வி. சித்ரா உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 6 வீடுகளில் குழாயில் அனுமதியின்றி மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சியது தெரிய வந்தது. இதையடுத்து, 6 மின் மோட்டார்களையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒவ்வொருவருக்கும் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.