பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை குளத்தில் தவறி விழுந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
பாபநாசம் அருகே அம்மாபேட்டை காவல் சரகம், சூழியக்கோட்டை கிராமம், மேலத்தெருவை சேர்ந்த சுயம்பிரகாசம் மகன் பிரதீப் (18). இவர் சாலியமங்கலத்திலுள்ள மெக்கானிக் பட்டறையில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், பிரதீப் செவ்வாய்க்கிழமை மாலை பச்சக்கோட்டை கிராமத்திலுள்ள ஒரு குளத்தில் கை, கால் கழுவ சென்றாராம். அப்போது எதிர்பாராதவிதமாக பிரதீப் குளத்தில் தவறி விழுந்தார். பிரதீபுக்கு நீச்சல் தெரியாததால், குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற பிரதீப் தண்ணீரில் மூழ்கினார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரதீப்பை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் குளத்தில் மூழ்கிய பிரதீப்பை தேடினர்.
இந்நிலையில், குளத்தின் ஆழமான பகுதியிலிருந்து பிரதீப்பின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாபேட்டை போலீஸார் பிரதீபின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.