பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோயில் சித்ரா பெளர்ணமி திருவிழா ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோயில் செயல் அலுவலர் சிதம்பரம் தலைமை வகித்தார். ஆத்தாளூர் ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் அமரநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் , ஏப்ரல் 10ஆம் தேதி காலை 9 மணிக்கு திருவிழாவுக்கான கொடியேற்றி அன்று இரவு 10.30 மணிக்கு காப்பு கட்டுதல் நடத்துவது எனவும் , ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருத்தேரோட்டமும், 19ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தீர்த்த திருவிழா நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் தேரோட்டம் நடைபெறுவதால், பாதுகாப்பு குறித்தும், வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்புவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் , முடப்புளிக்காடு கிராமத்தார்கள், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள், திருகோயில் பணியாளர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.