கும்பகோணம் அருகேயுள்ள சாக்கோட்டை, ராஜ மீனா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தொல்காப்பியன் (55). இவர் பட்டுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகந்தி (49) பருத்திச்சேரியிலுள்ள அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிகிறார். இவர்களுடைய இரு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.
இந்நிலையில், சென்னையில் இரண்டாவது மகள் வீட்டுக்கு தொல்காப்பியனும், சுகந்தியும் மார்ச் 8-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு வந்த சுகந்தி முன்பக்கக் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்தார். மேலும், பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 50 பவுன் நகைகள், ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீஸார் விசாரிக்கின்றனர்.