கும்பகோணம் அருகே மருதாநல்லூர் ஊராட்சியில் கஜா புயலின் போது விழுந்த மரங்களை
அகற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருதாநல்லூர் ஊராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. நகருக்குள் செல்ல வழியில்லாமல் சாய்ந்து கிடந்த மரங்களை அங்கு வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தி ஓரமாக அடுக்கி வைத்துள்ளனர்.
ஆனால், மரங்கள் சாலையோரப் பகுதியில் இருந்ததாகவும், அவை அரசுக்கு சொந்தமானது எனவும் கூறி மருதாநல்லூர் ஊராட்சிச் செயலர், எச்சரித்துச் சென்றார். இதனால் மரங்கள் அப்படியே கிடக்கின்றன.
5 மாதங்களாக மரங்கள் கிடப்பதால் அங்கிருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் அதிகம் வெளியே வருகின்றன. இதனால் பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மருதாநல்லூர் ஊராட்சியில் பல மாதங்களாகக் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.