கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 5,197 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் சிட்டி யூனியன் வங்கி மற்றும் அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 11,852 பேர் முகாமில் பங்கேற்று பெயர் பதிவு செய்தனர்.
தமிழகம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த 63 நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான ஆள்களைத் தேர்வு செய்தனர்.
8 ஆம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் என ஏராளமானோர் முகாமில் பங்கேற்றனர். நிறைவில், 5,197 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. சிட்டி யூனியன் வங்கி பவுண்டேஷன் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன், ரோட்டரி சங்க ஆளுநர் பிறையோன் ஆகியோர் தலைமை வகித்து, தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
சிட்டி யூனியன் வங்கி சிறப்பு திட்ட அதிகாரி பாலசுப்ரமணியன், ரோட்டரி உதவி ஆளுநர்கள் சவுமியநாராயணன், வின்சென்ட் பிரபாகரன், சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர்கள் அமீர்ஜான், டாக்டர் செல்வம் மற்றும் அனைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக புலத் தலைவர் பத்ரிநாத் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.