தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலையான கண்காணிப்பு குழுவினர் ஞாயிற்றுக்கிழமை விடுதிகள், திருமண மண்டபங்களில் சோதனை மற்றும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரே நாளில் மக்களவைக்கும், பேரவைக்கும் தேர்தல் நடைபெறுவதால் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுவினரும் தீவிரமாக வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதை தவிர தஞ்சை மாவட்டத்துக்குள் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளது. இதன்படி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் வகையில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிலையான கண்காணிப்பு குழு வட்டாட்சியர் சுஜாதா தலைமையில் தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வாகனம் எங்கு செல்கிறது, எதற்காக செல்கிறது ஆகியவற்றை விசாரணை செய்தனர். மேலும் வாகனத்தில் எடுத்து செல்லும் பொருள்கள், தேர்தல் விதிமுறைகள் மீறி ஏதாவது எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை நடத்தினர். இதன்பின்னர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் தேர்தல் விதிமுறை மீறி ஏதாவது நடைபெறுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், வீதிகளில் அரசியல் கட்சிகளின் கொடிகள், பிளக்ஸ், போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சோதனை நடத்தினர்.