கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இயக்க நிர்வாகிகள் வரலெட்சுமி, புவனேஸ்வரி சிறப்புரையாற்றினர்.
திருப்பனந்தாள் பேருந்து நிலையத்தில் இப்பேரணியை ஆசிரியர் அன்பழகன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இப்பேரணி பட்டம், மாராச்சேரி, மட்டியூர், மாவூத்திருப்பு, வாண்டையார் இருப்பு, அம்மையப்பன், உக்கரை, வடபாதி வழியாக தத்துவாஞ்சேரியில் முடிவடைந்தது. இப்பேரணியை வட்டாரக் கல்வி அலுவலர் சிவகுருநாதன் முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.
பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன் முத்தமிழ்ச்செல்வன், இதயராஜா, ஆசிரியர் சுந்தரராஜ், ஆசிரியை பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.