முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
திருக்கருகாவூர் கோயிலில் தேரோட்டம்
By DIN | Published On : 18th May 2019 09:11 AM | Last Updated : 18th May 2019 09:11 AM | அ+அ அ- |

பாபநாசம் வட்டம், திருக்கருகாவூரிலுள்ள அருள்மிகு முல்லைவன நாதர் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 9ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அருள்மிகு முல்லைவனநாதர், அருள்மிகு பார்வதி அம்மன், மற்றும் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்மன் உள்ளிட்டோர் திருத்தேருக்கு எழுந்தருளினர்.இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜவீதிகள் வழியாக வந்த தேர் பின்னர் நிலையை அடைந்தது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்மன் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
விழாவில் மே 18ஆம் தேதி காலை கோயில் திருக்குளத்தில் தீர்த்த வாரியும், அன்று இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், மே 19ஆம் தேதி மாலை விடையாற்றி விழா, அம்மன் உற்ஸவமும், மே 20ஆம் தேதி மாலை விடையாற்றி விழா சண்டிகேஸ்வரர் உற்ஸவமும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கோ. முரளிதரன், தக்கார் கிருஷ்ணன், கணக்கர் ராமதாஸ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.