பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் தேசிய அளவிலான இறகு பந்து போட்டி மே 12-ம் தேதி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பட்டுக்கோட்டை வட்டம், பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஏ. அட்சயா 19 வயதுக்குள்பட்டோருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தினார்.
இதே மாணவி கடந்த ஏப். 21-ம் தேதி கருர் மாவட்டம், தரகம்பட்டி நகரில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் 19 வயதுக்குள்பட்டோருக்கான இரட்டையர் பிரிவில் விளையாடி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
தேசிய மற்றும் மாநில இறகுப் பந்து போட்டிகளில் சாதனை நிகழ்த்திய மாணவி அட்சயாவிற்கு பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளர் வி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வி.பி. சந்திரசேகர் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் தலைமை ஆசிரியர் டி. ஆறுமுகம் வரவேற்றார். நிறைவாக உடற்கல்வி இயக்குநர் கிட்டப்பா நன்றி கூறினார்.