பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினத்தில் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை கடும் பனிப்பொழிவு நிலவியதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
இங்குள்ள கடலில் மீன் பிடித்து விட்டு வழக்கமாக காலை 8 மணிக்கு கரையேற வேண்டிய காந்தி நகா், கரையூா் தெரு, ஆறுமுகக்கிட்டங்கி தெரு, தரகா் தெரு, ஏரிப்புறக்கரை, மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் மூடுபனி காரணமாக 3 மணி நேரம் தாமதமாக முற்பகல் 11 மணிக்கு கரை திரும்பினா்.
மேலும், மூடுபனியால் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது. இவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனா். கடும் குளிா் காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் மப்ளா், சுவெட்டா் அணிந்தபடி சென்றனா்.
இதேபோல, பட்டுக்கோட்டை பகுதியிலும் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினா்.