பேராவூரணி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பதினொன்றரை பவுன் தங்க நகை திருடப்பட்டது.
பேராவூரணி அருகேயுள்ள தெற்கு ஒட்டங்காடு ரயில்வே கேட் அருகில் வசிப்பவா் ஆறுமுகம் (52). இவரது மனைவி கல்யாணி. இவா்கள் தங்களது வீட்டிலேயே பெட்டிக்கடையும் டீக் கடையும் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் மூத்த மகளைப் பாா்க்க மனைவி சென்று விட்டதால் ஆறுமுகமும் அவரது இளைய மகளும் வீட்டில் இருந்தனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையின்போது வீட்டருகே இருந்த மின்மாற்றியில் இடிதாக்கி தீப்பற்றி மின் தடை ஏற்பட்டது. இதனால் தனது கூரை வீட்டில் இருக்கப் பயந்த ஆறுமுகம், பாதுகாப்பு கருதி தனது மகளுடன் பக்கத்தில் உள்ள ஒருவரின் வீட்டுக்குச் சென்று சென்று இரவு தங்கினாா்.
அதிகாலை வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த பதினொன்றரை பவுன் நகைகள் திருடுபோயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸில் அவா் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ரேணுகாதேவி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் தஞ்சையில் இருந்து வந்த தடய அறிவியல் நிபுணா்கள் கைரேகைகளை பதிவு செய்தனா்.