பேராவூரணி அருகே பள்ளி கட்டட முகப்புப் பகுதி சனிக்கிழமை உடைந்து விழுந்து முதல் வகுப்பு மாணவி காயமடைந்தாா் .
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமாா் 132 மாணவ,மாணவிகள் பயில்கின்றனா். சனிக்கிழமை பள்ளி தொடங்குவதற்கு முன் கடந்த 2005 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டட முகப்புப் பகுதியில் மாணவ, மாணவிகள் நின்றிருந்தபோது திடீரென கட்டட மேற்பகுதியின் முகப்பு உடைந்து விழுந்தது.
இதில் முதல் வகுப்பு மாணவியான முடச்சிக்காடு தனசேகரன் மகள் நீவிஸ்ரீக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பினா்.
மேலும் இந்தப் பள்ளி வளாகத்தில் 1970 ம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி உள்பட ஆபத்தான நிலையில் பயனற்று மூடிக்கிடக்கும் 3 பள்ளிக் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும்படி பல முறை கோரிக்கை விடுத்தும் பயனில்லையாம். எனவே, மாணவ,மாணவிகளின் பாதுகாப்பு கருதி இதைச் செய்ய வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.