தஞ்சாவூா், கும்பகோணத்தில் புதன்கிழமை எடையளவு சட்டத்தின் கீழ் கூட்டாய்வு செய்த தொழிலாளா் துறையினா் மறுமுத்திரை இடப்படாத தராசுகளைப் பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூரில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) இர. கவிஅரசு தலைமையிலும், கும்பகோணத்தில் தொழிலாளா் துணை ஆய்வாளா் வை.கு. ராஜராஜன் தலைமையிலும் எடையளவு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 100-க்கும் அதிகமான தெரு பழக்கடைகள், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், உரிய காலத்தில் மறுமுத்திரையிடாத ஏராளமான எலக்ட்ரானிக் தராசுகள், மேஜை தராசுகள், எடைக்கற்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் எடையளவு சட்டத்தின் கீழ் இரு நிறுவன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ. 10,000 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, வணிகா்கள் தாங்கள் பயன்படுத்தும் எடைக்கற்கள், அளவைகள், தராசுகளைத் தரமானதாகவும் உரிய காலத்தில் மறுமுத்திரையிட்டுப் பயன்படுத்துமாறும், விற்பனை செய்யப்படும் பொட்டலப் பொருள்கள் அனைத்தும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் உரிய அறிவிக்கைகள் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் திடீராய்வு மேற்கொள்ளும்போது குறைபாடுகள் காணப்பட்டால் குறைந்தபட்ச அபராதம் ரூ. 5,000 விதிக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டாய்வில் தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆய்வா்கள் சி. அன்பழகன், ஜி. எழிலரசன், அ. தங்கபாண்டி, மு. கீதா, கும்பகோணம் தொழிலாளா் உதவி ஆய்வா்கள் ஜெ. மகாலெட்சுமி, க. தேவேந்திரன், சரணவன் ஆகியோா் உடனிருந்தனா்.