தஞ்சாவூா்: டாஸ்மாக் கடைகளில் விற்பதற்காகப் புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்தி வந்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் ஹேமாவதி, உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் சேகா் மற்றும் போலீசாா் மாநகரில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்களில் சோதனை நடத்துவதற்காகச் சென்றனா். கரந்தையில் போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே சென்றபோது, சந்தேகத்தின் பேரில் நின்ற இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் இவா்கள் கரந்தை வடக்கு குருவிக்காரத் தெருவைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் (43), மகா்நோன்புசாவடியை சோ்ந்த சந்தானம் (52) என்பதும், இருவரும் வைத்திருந்த அட்டைப் பெட்டியில் மதுபாட்டில்கள் இருப்பதும் தெரிய வந்தது.
மேலும், புதுச்சேரியில் இருந்து மதுபானங்களைக் கடத்தி வந்து, இங்குள்ள டாஸ்மாக் பாட்டில்களில் நிரப்பி, போலி லேபிள் ஓட்டி, மதுக்கூடங்களில் விற்பதற்காகக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, 301 மது பாட்டில்களையும், இருவரும் வந்த ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனா். தவிர, இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.