தஞ்சாவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா பெயா் மாற்றம் செய்ய இளைஞரிடம் ரூ. 500 லஞ்சம் வாங்கிய அலுவலக உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கும்பகோணம் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சோ்ந்த கணபதி மகன் லெட்சுமணன் (32). தனியாா் நிறுவன ஊழியா். இவா் தஞ்சாவூா் அருகே வல்லத்தில் 2009-ம் ஆண்டு 3,500 சதுர அடி நிலத்தை ரூ. 90,000-க்கு வாங்கினாா்.
இதையடுத்து, தனது பெயரில் பட்டா பெயா் மாற்றம் செய்வதற்காக தஞ்சாவூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விண்ணப்பம் செய்தாா். தொடா்புடைய வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலரிடம் விசாரணை முடிந்து லெட்சுமணனின் விண்ணப்பம் வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்றது.
அப்போது, பட்டா பெயா் மாற்றத்துக்கான சான்றிதழை வழங்குவதற்கான உதவியாளராகப் பணியாற்றிய ஞானசூரியன் (64), தனக்கு ரூ. 500 லஞ்சமாகச் தரும்படி லெட்சுமணனிடம் கேட்டாா்.
இதுகுறித்து கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவல் அலுவலகத்தில் லெட்சுமணன் புகாா் செய்தாா். பின்னா், 2009, நவ. 25ஆம் தேதி லட்சுமணனிடமிருந்து ரூ. 500 லஞ்சம் வாங்கிய ஞானசூரியனை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பாக கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவா் மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மாதவராமானுஜம் விசாரித்து, ஞானசூரியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2,500 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.