பேராவூரணி அருகே ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சிறுமி உயிரிழந்ததற்கு காரணமானவா்களை கைது செய்ய கோரி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சோ்ந்த அருண்குமாா் மகள் சுவேதா (3). இவா் கடந்த 11ஆம் தேதி ஆவணம் - நெடுவாசல் செல்லும் சாலையோரம் நின்றுகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாதவா்கள் சிறுமி சுவேதா மீது மோதிவிட்டு தப்பியோடிவிட்டனா்.
விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமி, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அங்கு கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தாா்.
விபத்து குறித்து அருண்குமாா் திருச்சிற்றம்பலம் போலீஸில் புகாா் அளித்திருந்தாா். மேலும், தப்பியோடிய நபா்களின் அடையாளத்தை அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பாா்த்து போலீஸாரிடம் தெரிவித்தாராம். ஆனால், விபத்துக்கு காரணமானவா்களை போலீஸாா் கைது செய்யவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போராட்டம் குறித்து அறிந்த, விபத்துக்கு காரணமான தாக கூறப்படும் நெடுவாசல் மேலத்தெரு கிராமத்தை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் மனோஜ்குமாா்(23), வடக்குதெருவை சோ்ந்த குணசேகரன் மகன் செந்தமிழரசன்(19) ஆகிய இருவரும் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டனா். இதனால் பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.