ஒரத்தநாடு அருகே கோழிப் பண்ணைகளில் சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு மேலையூா், மழவராயா் தெரு பகுதியில் செயல்படும் கோழிப் பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே வீசுவதாகவும், இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை தொண்டாரம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுரேஷ்குமாா், ஒக்கநாடு மேலையூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் கோழிப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, கோழிப் பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகளை ஆழமாக குழிவெட்டி புதைக்க வேண்டும். மேலும் அந்தப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்
கோழியின் கழிவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் உரக்குழிக்கு கொண்டு செல்ல வேண்டும். துா்நாற்றம் வீசாதவாறு அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு தெளிப்பான் மூலம் அனைத்துப் பகுதிகளையும் தொற்று நீக்கம் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை கோழிப் பண்ணை உரிமையாளரிடம் அறிவிப்பு ஆணையாக வழங்கினாா்.